text
stringlengths 23
10.7k
|
---|
ஒரு நாள் ஒரு கழுகு ஓர் ஆட்டை நோக்கிப் பாய்ந்து தன் நகங்களால் பற்றி அதைத் தூக்கிச் செல்வதை ஒரு காகம் கண்டது. "குறித்துக் கொள், இதை நானே செய்வேன்" என காகம் தனக்குத் தானே கூறிக் கொண்டது. எனவே ஆகாயத்தில் உயரப் பறந்தது. பிறகு வேகமாக இரு சிறகுகளையும் ஒடுக்கிக் கொண்டு ஒரு செம்மறியாட்டுக் கடாவின் முதுகை நோக்கி பாய்ந்தது. ஆனால் ஆட்டின் கம்பளியில் அதன் நகங்கள் மாட்டிக் கொண்டன. காகம் சிறகடித்தது. ஆனால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. எந்த முயற்சியும் காகத்திற்குப் பலனளிக்கவில்லை. ஆடு மேய்ப்பாளர் சிறிது நேரத்தில் வந்தார். "இதைத் தான் நீ செய்து கொண்டிருக்கிறாயா?" அவர் கூறினார். காகத்தின் இரு சிறகுகளையும் கட்டி குழந்தைகளிடம் காட்டுவதற்காகத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். உருவம் வித்தியாசமாக இருந்த காகத்தை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. "இது என்ன பறவை தந்தையே?" குழந்தைகள் கேட்டனர். "இது ஒரு காகம்" அவர் கூறினார். "ஆனால் தன்னை ஒரு கழுகாகக் கருதிய காகம்" என்றார்..நீதி: உன் சக்திக்கு மீறி முயன்றால், நீ பட்ட சிரமம் வீணாகும், நீ தோல்வியை மட்டும் வரவழைக்காமல் அவமானத்தையும் வரவழைப்பாய்..ஒரு கழுகு ஒரு முயலைத் துரத்திக் கொண்டிருந்தது. முயல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. அதற்கு எங்கு உதவி கேட்பது என்று தெரியவில்லை. அப்போது ஒரு வண்டைக் கண்டது. தனக்கு உதவுமாறு அதனிடம் மன்றாடியது. எனவே கழுகு வந்த போது தனது பாதுகாப்பின் கீழ் இருக்கும் முயலைத் தொடக்கூடாது என வண்டு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் வண்டு மிகவும் சிறியதாக இருந்ததால் கழுகால் வண்டைக் காண முடியவில்லை. அது முயலைப் பிடித்து முழுவதுமாக உண்டு விட்டது. வண்டு இதை என்றுமே மறக்கவில்லை. கழுகின் கூட்டின் மீது எப்போதுமே ஒரு பார்வை வைத்திருந்தது. எப்போதெல்லாம் கழுகு முட்டையிட்டதோ அப்போதெல்லாம் வண்டு அதன் கூட்டிற்கு ஏறி முட்டையைக் கூட்டிலிருந்து உருட்டி வெளியே தள்ளி உடைத்தது. இறுதியாக தனது முட்டைகள் உடைந்து போவதால் மிகுந்த வருத்தமடைந்த கழுகு கடவுள் ஜூப்பிட்டரிடம் சென்றது. அவர் கழுகுகளின் தனிச்சிறப்பான பாதுகாவலர் ஆவார். தான் கூடு கட்டுவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குமாறு அவரிடம் கழுகு மன்றாடியது. எனவே அவர் தனது மடியில் முட்டைகளை இடுமாறு கழுகுக்குக் கூறினார். ஆனால் இதை வண்டு கவனித்தது. கழுகின் முட்டையின் அளவுடைய ஒரு பந்தை சேறு மூலம் உருவாக்கியது. பறந்து சென்று ஜூப்பிட்டரின் மடியில் அந்தப் பந்தை வைத்தது. இந்த சேற்றுப் பந்தை ஜூப்பிட்டர் கண்ட போது அவர் எழுந்து நின்று தனது மேலங்கியை உதறினார். முட்டைகளை மறந்துவிட்டார். முட்டைகளையும் சேர்த்து உதறினார். முன்னர் போலவே முட்டைகள் மீண்டும் உடைந்தன. அன்றிலிருந்து தாங்கள் முட்டையிடும் காலத்தில் வண்டுகள் அருகில் இருக்கும் இடங்களில் கழுகுகள் என்றுமே முட்டையிடுவதில்லை என்று கூறப்படுகிறது..நீதி: சில நேரங்களில் பலவீனமானவர்கள் தங்களை விட பலமானவர்களையும் கூட அவமானத்திற்குப் பழி வாங்க வழிகளைக் கண்டறிவார்கள்..ஓர் இராப்பாடி கருவாலி மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு தன் வழக்கப்படி பாடிக் கொண்டிருந்தது. ஒரு பசியுடைய வல்லூறு அப்போது அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு அம்பு போல பறந்து சென்று தனது நகங்களால் இராப்பாடியை வல்லூறு பிடித்தது. இராப்பாடியைத் துண்டு துண்டுகளாக வல்லூறு கிழிக்க இருந்த நேரத்தில் தன்னை உயிரோடு விட்டு விடுமாறு இராப்பாடி மன்றாடியது. "உனக்கு நல்ல உணவாக ஆகுவதற்குப் போதிய அளவுக்குப் பெரிய அளவில் நானில்லை. நீ உன்னுடைய இரையைப் பெரிய பறவைகள் மத்தியில் தேடலாம்" என்று கூறியது. அந்த இராப்பாடியை வல்லூறு ஏளனத்துடன் பார்த்தது. "கண்ணிலே படாத பெரிய பறவையை விட, தற்போது என்னிடம் பிடிபட்டுள்ள சிறிய பறவையே மேல்" என்று அந்த வல்லூறு கூறியது..ஏதென்ஸில் ஒரு கடனாளியை அவருக்குக் கடன் கொடுத்தவர் கடனைச் செலுத்துமாறு கூறுவதற்காக வரவழைத்தார். தன் நிலைமை மிக மோசமாக இருப்பதால் சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு கடனாளி மன்றாடினர். தனக்குக் கடன் கொடுத்தவரை இணங்க வைக்க இயலாததால் தான் சொந்தமாக வைத்திருந்த ஒரே ஒரு பெண் பன்றியைக் கடன் கொடுத்தவருக்கு முன்னாலேயே விற்பதற்குக் கடனாளி ஆரம்பித்தார். அந்தப் பன்றியை வாங்க அங்கு ஒருவர் வந்தார். "பெண் பன்றி குட்டிகளை ஈனுமா?" என்று அவர் கேட்டார். |
"இது ஆச்சரியத்தக்க வகையிலே குட்டிகளை ஈனும்" என்று கடனாளி கூறினார். "சில காலங்களில் பெண் குட்டிகளை மட்டுமே ஈனும், மற்ற சில காலங்களில் ஆண் குட்டிகளை மட்டுமே ஈனும்" என்று கூறினார்..இதை அறிந்த பன்றியை வாங்க வந்தவர் ஆச்சரியமடைந்தார். அதே நேரத்தில் கடன் கொடுத்தவரும் தன் பங்குக்கு "நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் ஆச்சரியம் அடைந்திருக்க மாட்டேன். ஏனெனில், கடவுள் தியோனைசியசுக்கு இந்தப் பன்றி ஆட்டுக் குட்டிகளை கூட ஈனும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்றார்..நீதி: மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், நடக்க இயலாததற்கும் உறுதி வழங்குவதற்குத் தயங்க மாட்டார்கள்..ஓர் ஆடு மேய்ப்பாளர் புல்வெளியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காட்டு ஆடுகள் அவரது மந்தையை நோக்கி வந்து கலப்பதைக் கண்டார். அந்த நாளின் முடிவில் அனைத்து ஆடுகளையும் தனது வீட்டிற்கு ஓட்டிச் சென்றார். ஒரே பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்தார். அடுத்த நாள் கால நிலை மோசமாக இருந்ததால் எப்போதும் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல அவரால் இயலவில்லை. எனவே அவர் ஆடுகளை வீட்டில் உள்ள பட்டியிலேயே அடைத்து அவற்றுக்கு உணவிட்டார். தனது ஆடுகளுக்கு அவற்றின் பசிக்கும் அளவுக்கு உணவு கொடுத்தார். அதே நேரத்தில், காட்டு ஆடுகளுக்கு அவற்றால் எவ்வளவு உணவு உண்ண முடியுமா அந்த அளவு உணவையும், அதற்கு மேலும் கொடுத்தார். ஏனெனில், காட்டு ஆடுகள் தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். தான் அவற்றுக்கு நன்றாக உணவிட்டால் தன்னை விட்டு அவை செல்லாது என்று எண்ணினர். கால நிலை மேம்பட்ட போது புல்வெளிக்கு அனைத்து ஆடுகளையும் அவர் மீண்டும் ஓட்டிச் சென்றார். ஆனால் ஆடுகள் குன்றுக்கு அருகில் சென்ற போது மந்தையிலிருந்து காட்டு ஆடுகள் பிரிந்து குன்றுப் பகுதிக்குச் சென்று விட்டன. இதைக் கண்ட ஆடு மேய்ப்பாளர் அறுவறுப்படைந்தார். நன்றியற்ற தன்மைக்காக அவற்றை வசைபாடினார். "போக்கிரிகள்!" என்றார். "உங்களை நான் இவ்வளவு நல்ல முறையில் நடத்தியதற்குப் பிறகு இது போல நீங்கள் ஓடுவது சரியில்லை!" என்று கூறினார். இதைக் கேட்ட போது ஒரு காட்டு ஆடு திரும்பிக் கூறியது "ஆமாம். நீ எங்களை நல்ல விதமாக நடத்தினாய். உண்மையில் அளவுக்கு மீறி நல்ல விதமாக நடத்தினாய். புதிதாக வந்த எங்களைப் போன்றவர்களை உன்னுடைய சொந்த ஆடுகளை விட நல்ல விதமாக நடத்தினாய். இதே போல், நாளை உனது மந்தையில் சேருவதற்கு வரும் புதிய ஆடுகளை நன்றாகக் கவனிப்பதற்காக, எங்களை கவனிக்காமல் விட்டுவிடுவாய்" என்று கூறியது..நீதி: புதிய நண்பர்களுக்காகப் பழைய நண்பர்களை மோசமாக நடத்துவது என்பது முட்டாள் தனமானது..ஒரு சிறிய பண்ணையில் சில நோயாளிக் கோழிகள் இருப்பதை அறிந்த ஒரு பூனை மருத்துவர் போல் வேடமணிந்து மருத்துவருக்குண்டான உபகரணங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு பண்ணைக்குச் சென்றது. அங்கு கோழிகளிடம் அவற்றின் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று விசாரித்தது. தங்களது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், பூனை அவற்றை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றால் தொடர்ந்து நன்றாக இருக்கும் என்றும் கூறின. |
நீதி: உன்னுடைய எதிரிகளை அறிந்து கொள்..ஒரு நாள் ஈசாப் தனக்குக் கிடைத்த ஓர் உபரி நேரத்தைச் செலவழிப்பதற்காக ஒரு கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பணியாட்கள் அவரை வம்புக்கு இழுத்தனர். அவரைப் பதிலளிக்க வைக்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினர். எனவே ஈசாப் அவர்களிடம் ஒரு கதையைக் கூறினார்:."தொடக்கத்தில் ஒழுங்கற்ற தன்மை மற்றும் நீர் ஆகியவை மட்டுமே இருந்தன. கடவுள் சியுசு பூமி எனும் மற்றொரு பகுதியைத் தோற்றுவிக்க விரும்பினார். அதற்கு அவர் மூன்று முறை கடலை விழுங்க வேண்டியிருந்தது. பூமியைச் செயல்பட வைப்பதற்காக அவர் ஒரு முறை கடலை விழுங்கினார். இதன் விளைவாக மலைகள் உருவாயின. பிறகு இரண்டாவது முறை கடலை விழுங்கினார். சமவெளிகள் உருவாயின. அவர் கடலை மூன்றாவது முறை விழுங்க முடிவு செய்தால் உங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்"..நீதி: உன்னை விட புத்திசாலியை இகழ முயற்சித்தால் புத்திசாலியின் பதில் உன் இகழ்ச்சியை விடப் பலமானதாக இருக்கும்..ஒரு குள்ளநரி ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. அதனால் கிணற்றிலிருந்து மீண்டும் வெளியே வர இயலவில்லை. அங்கு ஒரு தாகமுடைய ஆடு வந்தது. குள்ளநரியை அந்தக் கிணற்றில் கண்ட ஆடு "தண்ணீர் நன்றாக உள்ளதா?" என்று கேட்டது. "நன்றாக உள்ளது" என்றது குள்ளநரி. "என் வாழ்நாளில் சுவைத்த நீரிலேயே இதுவே சிறந்தது. கீழே வந்து நீயே ஒரு முறை சுவைத்துப் பார்" என்றது. தன்னுடைய தாகத்தைத் தணிப்பதைத் தவிர்த்து எதைப் பற்றியும் யோசிக்காத ஆடு ஒரே தாவாகத் தாவி கிணற்றுக்குள் குதித்தது. தனது தாகம் தணிந்த பிறகு, குள்ளநரியைப் போலவே அதுவும் சுற்றி முற்றி கிணற்றில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேடியது. ஆனால் அதனால் எந்த வழியையும் கண்டறிய இயலவில்லை. தற்போது நரி "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நீ உன் பின்னங்கால்களை ஊன்றி நில். உனது முன்னங்கால்களை கிணற்றின் சுவர் மீது வைத்து நில். நான் உன் முதுகில் ஏறி, பிறகு உனது கொம்புகளில் நடந்து வெளியே செல்கிறேன். நான் வெளியே சென்ற பிறகு, வெளியே வருவதற்கு உனக்கும் உதவி செய்வேன்" என்று கூறியது. நரி கேட்டுக் கொண்டவாறு ஆடு செய்தது. அதன் முதுகில் தாவிய நரி கிணற்றில் இருந்து வெளியேறியது. பிறகு அமைதியாக நடந்து சென்றது. ஆடு குள்ளநரியைச் சத்தமாக அழைத்தது. தன்னை கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வர உதவுவதாக அளித்த உறுதி மொழியை நினைவுபடுத்தியது. ஆனால் குள்ளநரி வெறுமனே திரும்பி கூறியது "உன்னுடைய தாடியில் உள்ள முடியின் அளவுக்கு உன்னுடைய தலையில் அறிவு இருந்திருந்தால் கிணற்றிலிருந்து வெளியே வருவது எவ்வாறு என்பதை அறியாமல், நீ கிணற்றுக்குள் குதித்திருக்க மாட்டாய்" என்று கூறியது..நீதி: ஆழம் தெரியாமல் காலை விடாதே. |
வழிமாற்று ஈசாப் நீதிக் கதைகள்/கிணற்றில் குள்ளநரியும், ஆடும்.ஒரு சிங்கத்தை அதற்கு முன்னர் என்றுமே கண்டிராத ஒரு குள்ளநரி ஒரு நாள் அதைக் கண்டது. சிங்கத்தைக் கண்டவுடனேயே சிங்கத்தின் உருவம் அதற்கு மிகவும் அச்சுறுத்தலாகத் தோன்றியது. பயத்தின் காரணமாக உயிரிழந்து விடலாமா என்ற எண்ணம் அதற்குத் தோன்றியது. சிறிது காலத்திற்குப் பிறகு, சிங்கத்தை குள்ளநரி மீண்டும் கண்டது. இந்த முறையும் பயந்தது. ஆனால், முதல் முறை சிங்கத்தைக் கண்ட போது அடைந்த அளவுக்கு அதிகமான பயத்தை அது அடையவில்லை. மூன்றாவது முறை சிங்கத்தை குள்ளநரி கண்ட போது அதற்கு அச்ச உணர்வு இல்லாது இருந்தது. சிங்கத்திடம் நேராகச் சென்றது தன் வாழ்நாள் முழுவதும் சிங்கத்தை அறிந்தது போல் அதனிடம் பேசத் தொடங்கியது..நீதி: ஒன்றை நிறைவாக அறிந்திருக்கும் நிலையானது ஏளன உணர்வை ஏற்படுத்தும்..புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்த ஒரு மீனவன் ஒரு நாள் தன்னுடைய வலைகள் மற்றும் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான். ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினார். இசையானது கடலில் இருந்து மீன்களைத் துள்ளிக் குதித்து வெளி வரச் செய்யும் என்று எண்ணினார். புல்லாங்குழலை சில நேரத்திற்குத் தொடர்ந்து வாசித்தார். ஆனால் ஒரு மீன் கூட தோன்றவில்லை. எனவே இறுதியாக தனது புல்லாங்குழலை தூக்கி எறிந்து விட்டு தனது வலையை கடலில் வீசினர். ஏராளமான மீன்களைப் பிடித்தார். மீன்கள் தரையில் விழுந்த போது அவை கடற்கரையில் துள்ளிக் குதிப்பதை கண்ட அவர் "போக்கிரிகளே! நான் உங்களுக்குப் புல்லாங்குழல் வாசித்த போது நீங்கள் நடனமாடவில்லை. ஆனால் புல்லாங்குழலை வாசிப்பதை நிறுத்திய பிறகு நடனம் ஆடுவதைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்யவில்லை!" என்று கூறினார்..நீதி: ஒருவன் தனக்குத் தெரிந்த தொழிலைச் செய்ய வேண்டும்..ஒரு குள்ளநரியும், ஒரு சிறுத்தையும் தங்களது உடல் தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தன. இரண்டும் தாமே மிகுந்த அழகானவர் என்று கூறின. "என்னுடைய அழகான தோலைப் பார். அதற்கு ஈடாக உன்னிடம் எதுவும் இல்லை" என்று சிறுத்தை கூறியது. "உன்னுடைய தோல் அழகாக இருக்கலாம். ஆனால் என்னுடைய புத்திக் கூர்மை அதை விட அழகானது" என்று நரி கூறியது. |
நீதி: பொய் கூறுபவர்களும், பெருமை பேசுபவர்களும் தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்வார்கள்..சில மீனவர்கள் ஒரு பெரிய வலையைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்தனர். அது மிகவும் கனமாக இருந்ததால் அவர்கள் ஆர்ப்பரித்து நடனமாடினர். தாங்கள் பிடித்தது மிகப் பெரும் அளவாக இருக்கும் என்று எண்ணினர். ஆனால் அவர்களது வலையைக் கரைக்கு இழுத்துக் கொண்டு வந்த போது அதில் மிகச் சில மீன்களே இருந்தன. அதில் பெரும்பாலும் கற்களும், குப்பைகளும் நிரம்பி இருந்தன..மீனவர்கள் அடுத்து மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். அவர்கள் என்ன நடந்தது என்பதற்காக மன வருத்தம் அடையாமல், தங்களது எதிர்பார்ப்பு ஏமாற்றமானது என்பதற்காக மன வருத்தமடைந்தனர்..ஆனால் அவர்களில் ஒருவரான ஒரு முதியவர் மற்றவர்களிடம் கூறினார்:."நண்பர்களே மன வருத்தம் அடையாதீர்கள். மகிழ்ச்சியும், வருத்தமும் மாறி மாறி வரும். ஒன்று நிறைவேறும் முன்னரே நாம் ஆர்ப்பரித்தால், அதற்கு எதிர்மாறான ஒன்று நடக்கும் என்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.".நீதி: வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. |
ஒரு குள்ளநரியும் ஒரு குரங்கும் ஒன்றாக ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தன. ஆனால் இருவரில் யார் சிறந்த பிறப்பை உடையவர் என்ற வாதம் அவற்றுக்கு இடையே எழுந்தது. சிறிது நேரம் அவை விவாதித்துக் கொண்டிருந்தன. நினைவு சின்னங்களால் நிரம்பி இருந்த ஒரு இடுகாட்டுக்குள் சென்ற ஒரு சாலையைக் கொண்ட ஒரு இடத்திற்கு வரும் வரை அவை இவ்வாறு விவாதித்தன. அந்த இடத்தில் குரங்கு நடப்பதை நிறுத்தியது. குள்ளநரியைப் பார்த்து பெருமூச்சு விட்டது. "ஏன் பெருமூச்சு விடுகிறாய்" என்றது குள்ளநரி. கல்லறைகளை நோக்கிக் கை நீட்டிய குரங்கு பதில் அளிக்க ஆரம்பித்தது: "இங்கு நீ காணும் அனைத்து நினைவுச் சின்னங்களும் என்னுடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டவை. என்னுடைய முன்னோர்கள் அவர்களது காலத்தில் பெருமை பெற்றவர்களாக இருந்தனர்" என்றது. ஒரு கணத்திற்குக் குள்ளநரிக்குப் பேச்சு வரவில்லை. ஆனால் அது சீக்கிரமே மீண்டு பின்வருமாறு கூறியது "அய்யா, எந்த ஒரு பொய்யையும் நிறுத்தாதீர்கள். நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். உங்களது முன்னோர்கள் மீண்டும் எழுந்து உங்களது பொய்யைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்" என்றது..நீதி: தங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்பதை அறிந்து கொள்ளும் போது பெருமை பேசுபவர்கள் அதிகப்படியாக பெருமை பேசுவார்கள்..சில திராட்சைக் கொத்துகள் ஒரு உயர்ந்த பந்தலில் இருந்த கொடியிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பதை ஒரு பசியுடைய குள்ளநரி கண்டது. தன்னால் எவ்வளவு உயரத்திற்குத் தாவ முடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தாவி அத்திராட்சைகளைப் பறிக்க முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் வெற்றியடையவில்லை. திராட்சைகள் எட்டாத உயரத்தில் இருந்தன. எனவே குள்ளநரி தனது முயற்சியைக் கைவிட்டது. மதிப்புடன் நடந்து கொள்ளவும், அதைக் கவனிக்காததாகக் காட்டிக் கொள்ளவும் "இந்தத் திராட்சைகள் இனிப்பானவை என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது தெரிகிறது அவை மிகவும் புளிப்பானவை" என்றது..நீதி: ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றாலாம்..ஒரு பூனை ஒரு சேவல் கோழி மீது பாய்ந்தது. அதை உண்பதற்குக் காரணம் தேடியது. ஏனெனில், சேவல் கோழிகளைப் பூனைகள் உண்பது என்பது விதி கிடையாது. பூனைக்குத் தெரியும் அது உண்ணக் கூடாது என்று, இறுதியாக அது கூறியது "இரவில் கொக்கரித்ததன் மூலம் நீ மக்களை எழுப்பி விட்டாய். எனவே உன்னை நான் கொல்லப் போகிறேன்" என்றது. ஆனால் சேவல் தன் பக்க நியாயத்தைப் பின்வருமாறு கூறியது "மனிதர்கள் நேரத்திற்கு விழித்து தங்களது அந்த நாள் பணியை நல்ல நேரத்தில் தொடங்க வேண்டும் என்பதற்காகவே நான் கொக்கரித்தேன்" என்று கூறியது. நான் இல்லாமல் மனிதர்களால் நல்ல முறையில் வாழ முடியாது என்றது. "இருக்கட்டும்" என்றது பூனை. "ஆனால் அவர்களால் முடியுமோ முடியாதோ, நான் என்னுடைய இரவு உணவை உண்ணாமல் இருக்கப் போவதில்லை" என்றாது. இறுதியாக பூனை சேவல் கோழியைக் கொன்று உண்டது..நீதி: எந்த ஒரு சிறந்த விளக்கமும் ஒரு வில்லனை அவன் குற்றமிழைப்பதில் இருந்து தடுப்பதில்லை. |
ஒரு குள்ளநரி ஒரு முறை ஒரு கண்ணியில் மாட்டிக் கொண்டது. ஒரு போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. ஆனால் அப்போராட்டத்தில் தன்னுடைய வாலை இழந்தது. அது தன்னுடைய தோற்றத்தைக் கண்டு மிகவும் வெட்கம் அடைந்தது. தான் உயிர் வாழ்வதற்குத் தகுதியற்றது என்று எண்ணியது. இதன் காரணமாக வாலை வெட்டி விடுமாறு மற்ற குள்ளநரிகளையும் இணங்க வைக்க வேண்டும் என நினைத்தது. இவ்வாறாக தன்னுடைய சொந்த இழப்பிலிருந்து மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்பலாம் என்று எண்ணியது. எனவே அது அனைத்து குள்ள நரிகளின் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தது. அவற்றின் வால்களை வெட்டி விடுமாறு அவற்றிற்கு அறிவுரை கூறியது. "எவ்வாறிருந்தாலும் இந்த வால்கள் அசிங்கமான உறுப்புகள் ஆகும். மேலும் அவை கனமாகவும் உள்ளன. உங்களுடன் இந்த வால்களைச் சுமந்து கொண்டிருப்பதும் ஒரு சோர்வடையச் செய்யும் பணியாக இருக்கும்." ஆனால் பிற குள்ளநரிகளில் ஒன்று கூறியது, "என் நண்பா, நீ உனது சொந்த வாலை இழந்து இருக்காவிட்டால், எங்களது வால்களும் வெட்டப்பட வேண்டும் என்பதில் உனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு இருக்காது"..நீதி: உனக்கு அறிவுரை கூறுவதன் மூலம் ஆதாயம் பெறுபவர்களை நீ நம்பாதே..ஒரு மீனவன் தன்னுடைய வலையைக் கடலில் வீசினான். அவன் வலையை இழுத்த போது அதில் ஒரு சிறிய மீன் மட்டுமே இருந்தது. அது தன்னை மீண்டும் நீரில் விட்டு விடுமாறு கெஞ்சியது. "நான் இப்பொழுது ஒரு சிறிய மீன் மட்டுமே" என்றது. "ஆனால் ஒரு நாள் நான் பெரிதாக வளர்வேன். அப்போது நீங்கள் வந்தால், என்னை நீங்கள் மீண்டும் பிடித்தால், அந்நிலையில் நான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பேன்" என்றது. ஆனால் மீனவன் பதிலளித்தான் "இல்லை. நான் தற்போது உன்னை பிடித்து இருப்பதால், வைத்துக் கொள்ள வேண்டும். நான் உன்னை விட்டால், உன்னை மீண்டும் என்றாவது காண முடியுமா? முடியாது!"..நீதி: பெறுவதற்கு வாய்ப்புள்ள பெரிய பொருளை விட, கையில் இருக்கும் சிறிய பொருளுக்கு மதிப்பு அதிகம்..ஒரு குள்ளநரி ஒரு தடுப்பு வேலியில் ஏறும் போது கால் இடறி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஒரு முட்புதரில் காலை வைத்தது. தனது உள்ளங்காலில் முட்கள் குத்தி காயமடைந்தது. அதனுடைய உதவியை தேடி வந்த தன்னை, தடுப்பு வேலி நடத்தியதைக் காட்டிலும் மோசமாக நடத்தியதாக முட்புதர் மீது குள்ளநரி குற்றம் சாட்டியது. அதை வழிமறித்த முட்புதர் "மற்றவர்களை தைக்கும் என் மீது நீ கால் வைத்தது என்பது உன் புத்தி மாறியதால் இருக்கலாம்" என்றது. .நீதி: சில நேரங்களில் நீங்கள் உங்கள் எதிரிகளிடம் கூட உதவி கேட்கும் நிலை வரலாம். |
குள்ளநரியும், முதலையும் தங்களது உயர் பிறப்பு பற்றி வாதமிட்டன. முதலை தனது உடலை முழுவதுமாக நீட்டித்து தனது முன்னோர்கள் உடற்பயிற்சியாளர்களாக இருந்தனர் என்றது. நரி "நீ அதைக் கூறவே தேவையில்லை. உன்னுடைய தோலைக் கண்ட மாத்திரத்திலேயே தோல்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்கு நீண்ட நாட்களாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறாய் என்பதை என்னால் காண முடிகிறது" என்றது..நீதி: பொய் கூறுபவர்களை அவர்களின் செயல்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்..சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகும் அவர்களால் எதையும் பிடிக்க இயலவில்லை. வலையை மடித்து அவர்கள் திரும்புவதற்கு முடிவெடுத்தனர். அப்போது திடீரென ஒரு பெரிய மீனால் துரத்தப்பட்ட ஒரு சூரை மீன் அவர்களது படகு மீது தாவி விழுந்தது. அந்த மீனவர்கள் சூரை மீனை பிடித்தனர். வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்..ஒரு குள்ளநரி வேட்டையாடுபவர்களால் துரத்தப்பட்டது. நீண்ட தூரம் ஓடி கலைத்தது. ஒரு காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த ஒரு மரவெட்டியைக் கண்டது. தான் ஒளிவதற்கு ஓர் இடம் வழங்குமாறு அவனிடம் மன்றாடியது. அருகிலிருந்த தன்னுடைய கொட்டகையில் குள்ளநரி ஒளிந்து கொள்ளலாம் என்று அவன் கூறினான். சீக்கிரமே வேட்டையாடுபவர்கள் வந்தனர். "இந்த பக்கம் ஒரு குள்ளநரி ஓடியதை கண்டாயா?" என்று கேட்டனர். மரவெட்டி "இல்லை" என்றான். ஆனால் குள்ளநரி ஒளிந்திருந்த இடத்தை நோக்கி தனது கை விரலைக் காட்டினான். வேட்டையாடுபவர்கள் அந்த குறியீட்டை எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பிச் சென்றனர். அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் சுவற்றில் இருந்த ஒரு துளை வழியாக கண்ட குள்ளநரி வெளியில் வந்தது. எதுவும் கூறாமல் நடந்து செல்ல ஆரம்பித்தது. "இப்போது எப்படி இருக்கிறாய்? நீ செல்லும் முன்னர் நன்றி கூறும் பழக்கம் இல்லையா?" என்றான். "இருக்கிறது. உன்னுடைய நாக்கின் மூலம் வெளிப்படுத்திய வார்த்தையைப் போல் உன்னுடைய கை விரல்களை நீட்டுவதிலும் நேர்மையானவனாக இருந்திருந்தால் நான் நன்றி சொல்லாமல் இங்கு இருந்து சென்றிருக்க மாட்டேன்" என்றது..நீதி: மனசாட்சி என்பது வாய் வார்த்தை போல செயல்களிலும் உண்மையாக இருப்பதாகும்..ஒரு மனிதன் தன் வீட்டில் சில சேவல்களை வளர்த்து வந்தான். ஒருவர் விற்ற ஒரு கௌதாரியை தன் வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்தான். கௌதாரிக்கு சேவல்களுடன் சேர்த்து உணவிடலாம் என்று எண்ணினான். ஆனால் சேவல்கள் கௌதாரியை கொத்தி துரத்தின. தான் ஒரு வேற்றின உயிரினமாக இருப்பதால் தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என ஒரு கனத்த இதயத்துடன் கௌதாரி எண்ணிக் கொண்டது. |
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சேவல்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிடுவதை கௌதாரி கண்டது. தமக்கு இரத்தம் வரும் வரை அவை சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இதை கண்ட கௌதாரி தனக்குத் தானே "இந்த சேவல்களால் நான் தாக்கப்படுவதை இனி மேலும் ஒரு புகாராக கூற மாட்டேன். ஏனெனில் இந்த சேவல்களுக்கு ஒன்றின் மீது ஒன்று கூட இரக்கம் இல்லை" என்று கூறிக் கொண்டது..நீதி: அண்டை வீட்டார் தமது சொந்த பெற்றோரைக் கூட இடர்பாடுக்கு உள்ளாக்குவதில் இருந்து விடுவதில்லை என்பதை அறியும் புத்திசாலி மனிதர்கள் தங்களது அண்டை வீட்டாரின் கோபத்தை எளிதாக சகித்துக் கொள்வார்கள்..ஒரு பசியுடைய குள்ளநரி ஒரு கூடாகி போன மரத்திற்குள் ரொட்டித் துண்டுகளையும், மாமிசத்தையும் கண்டது. அதை அங்கு சில மேய்ப்பாளர்கள் தாங்கள் திரும்பி வரும் போது எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக வைத்து விட்டுச் சென்றனர். உணவைக் கண்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த குள்ளநரி அதில் இருந்த சிறிய துளை வழியாக மரத்திற்குள் சென்றது. அங்கிருந்த அனைத்து உணவையும் பேராசையால் உண்டது. ஆனால் அது வெளியே வர முயற்சித்த போது பெரும் அளவிலான உணவை உண்டதன் காரணமாக அதன் வயிறு முட்டியிருந்ததை அறிந்தது. இதன் காரணமாக அதனால் துளை வழியாக வெளியே வர இயலவில்லை. தன்னுடைய துரதிர்ஷ்ட நிலையைக் கண்டு கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. அவ்வழியே சென்ற மற்றொரு குள்ளநரி அங்கு வந்தது. என்ன விஷயம் என்று அதனிடம் கேட்டது. வயிறு முட்டிய குள்ளநரியின் நிலையை அறிந்து அது "நீ உன்னுடைய முந்தைய உடல் அளவுக்கு சுருங்கும் வரை இந்த மரத்துக்கு உள்ளேயே இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று கருதுகிறேன் நண்பா; அதன் பிறகு நீ எளிதாக இங்கிருந்து வெளியே வரலாம்" என்றது..நீதி: பேராசைப் படாதே..அல்சியோன் என்பது தனிமையில் வாழ்வதை விரும்பிய மற்றும் பெரும்பாலும் கடலிலேயே வாழ்ந்த ஒரு பறவை ஆகும். தன்னை வேட்டையாட வரும் மனிதர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அது ஆற்றங்கரை அல்லது கடற்கரைகளில் இருந்த பாறைகளின் மீது கூடுகட்டும் எனக் கூறப்பட்டது..தற்போது ஒருநாள் ஒரு அடை காக்கும் நிலையில் இருந்து அல்சியோன் பறவை கடலின் நடுவில் இருந்த ஒரு சிறு மேட்டு நிலப் பகுதிக்கு சென்றது. அங்கு கடலுக்கு மேல் துருத்திக் கொண்டிருந்த ஒரு பாறையைக் கண்டது. தன்னுடைய கூட்டை அங்கு அமைத்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு அது இரை தேடச் சென்ற போது, திடீர் புயல் காற்று ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக கடலானது கொந்தளித்தது. அலைகள் கூடு அமைந்திருந்த இடம் வரை எழுந்தன. கூடானது நீரால் நிரப்பப்பட்டது. அப்பறவையின் இளம் பறவைகள் மூழ்கின. |
திரும்பி வந்த அல்சியோன் பறவை என்ன நடந்தது என்பதை கண்டது. அழுதவாறு "நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி! நிலத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருந்த வேட்டைக்கு பயந்து கடலால் அதை விட ஆபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ள ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்து விட்டேனே!" என்றது..நீதி: சில மனிதர்கள் தங்களது எதிரிகளுக்கு பயந்து, நண்பர்களாக காட்டி கொள்வோரை நம்புகின்றனர். அவர்கள் உண்மையிலேயே அவர்களது எதிரிகளை விட மிகவும் ஆபத்தானவர்கள் ஆவர்..ஒரு மீனவன் ஓர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தனது வலைகளை ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கட்டி நீரோட்டத்துக்கு இடையில் வைத்தான். ஒரு வெளிர் மஞ்சள் நிற கயிற்றின் முனையில் கல்லைக் கட்டி தண்ணீரில் அடித்தான். இதன் மூலம் மீன்கள் அச்சமடைந்து தப்பித்து ஓடும் போது அவை வலையில் மாட்டுமென எண்ணினான்..இதை அருகில் இருந்த உள்ளூர்க்காரன் ஒருவன் கவனித்துக் கொண்டிருந்தான். ஆற்றின் அமைதியைக் குலைப்பதற்காக மீனவனை கண்டித்தான். இதன் மூலம் நீரை கலங்கல் ஆக்குவதாக கூறினான்..மீனவன் இதற்கு "ஆற்றை கலங்கல் ஆக்காவிட்டால் பசியால் நான் இறந்து விடுவேன்" பதிலளித்தான்..நீதி: சிலர் என்றுமே மற்றவர்களின் செயல்களை புரிந்து கொள்வதில்லை. |
ஒரு குள்ளநரி ஒரு நடிகரின் வீட்டிற்குள் புகுந்தது. அங்கு அது அவனது துணிமணிகளில் பிற பொருட்களுடன் ஒரு பெரிய, அழகாக வடிவமைக்கப்பட்ட ஓர் இராட்சதனின் முகமூடியைக் கண்டது. அந்த முகமூடியை தனது கால்களில் எடுத்த அது ஆச்சரியமடைந்து "என்ன ஒரு தலை! ஆனால் இந்த தலைக்கு மூளை இல்லை!" என்று கூறியது..நீதி: வெளிப்புற தோற்றத்தை வைத்து ஒருவரது மதிப்பை அளவிட முடியாது..ஒரு மனிதன் உடல் நலம் குன்றினான். உடல் நிலை மோசமடைந்ததால் கடவுள்கள் அவனுக்கு உடல் நலத்தை வழங்கினால் 100 காளை மாடுகளை பலியிடுவேன் என்று உறுதியளித்தான். அவனது உறுதியை எவ்வாறு நிறைவேற்றுவான் என்பதை அறிய விரும்பிய கடவுள்கள் அவன் குறுகிய காலத்திலேயே உடல் நலக்குறைவில் இருந்து மீளச் செய்தனர். தற்போது அவனுக்கு இந்த உலகில் சொந்தமாக ஒரு காளை கூட கிடையாது. எனவே அவன் மாட்டு கொழுப்பிலிருந்து 100 சிறிய காளை மாடுகளை உருவாக்கினான். அவற்றை ஒரு பீடத்தின் மீது படையலாக கொடுத்தான். அப்போது அவன் "கடவுள்களே, நான் எனது உறுதியை நிறைவேற்றி விட்டேன் என்பதை தற்போது நீங்கள் காணலாம்" என்றான். கடவுள்கள் அவனுக்குப் பாடம் புகட்ட விரும்பினர். எனவே அவனுக்கு ஒரு கனவு ஏற்பாடுமாறு செய்தனர். அக்கனவில் அவன் ஒரு கடற்கரைக்கு சென்று அங்கே 100 மகுடங்களை காண்பதாக கனவு கண்டான். மிகுந்த உற்சாகமடைந்த அவன் கடற்கரைக்கு சென்றான். ஆனால் அங்கு இருந்ததோ கொள்ளையர்கள் ஆவர். கொள்ளையர்களிடம் அவன் மாட்டிக் கொண்டான். அவர்கள் அவனை பிடித்து அடிமையாக விற்பதற்காக தூக்கி சென்றனர். அவனை விற்ற போது அவனுக்கு விலையாக 100 மகுடங்களை அவர்கள் பெற்றனர்..நீதி: உன்னாள் கொடுக்க இயலும் அளவுக்கு மேல் உறுதி அளிக்காதே..ஒரு காலத்தில் ஒரு மரக்கரி எரிப்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பணிகளை தானே செய்து வந்தான். எனினும் ஒரு சலவைக்காரன் அப்பகுதிக்கு வந்தான். மரக்கரி எரிப்பவனுக்கு அருகிலேயே தங்கினான். அவனைச் சந்தித்த மரக்கரி எரிப்பவன் தன்னுடன் ஒத்துப் போகும் இயல்பு சலவைக்காரனுக்கு இருப்பதை அறிந்தான். தன்னுடன் வந்து தனது வீட்டை பகிர்ந்து கொள்வானா என்று சலவைக்காரனிடம் கேட்டான். "நாம் இருவரும் ஒருவரையொருவர் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்" என்றான். மேலும் "நமது வீட்டுச் செலவுகளும் குறையும்" என்றான். சலவைக்காரன் அவனுக்கு நன்றி தெரிவித்தான். ஆனால் "என்னால் அவ்வாறு செய்ய முடியாது; ஏனெனில் நான் சிரமப்பட்டு வெளுப்பவை உடனேயே மரக்கரியால் கருப்பாகி விடும்" என்று கூறினான்..நீதி: ஒரே மாதிரியான நபர்கள் இணைந்தால் நன்முறையில் செயலாற்ற முடியும். |
வழிமாற்று ஈசாப் நீதிக் கதைகள்/மரக்கரி எரிப்பவனும், சலவைக்காரனும்.ஏதென்ஸைச் சேர்ந்த ஒரு செல்வந்தன் தன்னுடைய சில கூட்டாளிகளுடன் ஒரு கடல் பயணத்தை மேற்கொண்டான். ஒரு பெரும் புயல் தாக்கியதன் காரணமாக கப்பல் கவிழ்ந்தது. மற்ற அனைத்து பயணிகளும் நீந்த ஆரம்பித்தனர். ஆனால் ஏதென்ஸைச் சேர்ந்தவன் மட்டும் கடவுள் ஏதெனாவிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான். தன்னைக் காப்பாற்றினால் பதிலுக்கு தான் செய்வதாக ஏராளமான உறுதி மொழிகளைக் கூறிக் கொண்டிருந்தான். அப்போது மூழ்கிய கப்பலைச் சேர்ந்த பயணிகளில் ஒருவன் அவனைத் தாண்டி நீந்திச் சென்று கொண்டே கூறியதாவது "ஏதெனாவை வழிபடும் அதே நேரத்தில் உன்னுடைய கைகளையும் அசைக்கத் தொடங்கு" என்றான்..ஒரு நடுத்தர வயதுடைய மனிதனின் தலை முடிகள் நரைக்க ஆரம்பித்தன. அவனுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். ஒரு மனைவி வயது முதிர்ந்தவராகவும், மற்றொரு மனைவி இளம் வயதுடையவராகவும் இருந்தனர். வயது முதிர்ந்த மனைவி தன் கணவன் தன்னை விட மிகவும் இளையவராக தோற்றம் கொண்டு இருப்பதை விரும்பவில்லை. எனவே தன் கணவன் தன்னை காண வரும் போதெல்லாம் அவனது தலையிலிருந்து கரு நிற முடிகளை பிடிங்கினார். இதன் மூலம் அவனை வயதான தோற்றத்தை அடைய வைக்க எண்ணினார். இளம் வயதுடைய மனைவி மற்றொரு புறம் தன் கணவன் தன்னை விட மிகவும் வயது முதிர்ந்தவராக காணப்படுவதை விரும்பவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவன் தலையிலிருந்து நரைத்த முடிகளைப் பிடுங்கினாள். தன் கணவன் தன்னை விட இளையவராகக் காணப்படுவதற்காக அவள் இவ்வாறு செய்தாள். இவ்வாறாக கடைசியில் அந்த கணவனின் தலையில் ஒரு முடி கூட இல்லாமல் போய்விட்டது..நீதி: அனைவருக்கும் பாலன் கொடுக்க நினைப்பவர்கள் சீக்கிரமே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விடுகின்றனர்..ஒரு கொலையைச் செய்த ஒரு மனிதன் அவனால் கொல்லப்பட்டவனின் பெற்றோர்களால் துரத்தப்பட்டான். அக்கொலைகாரன் நைல் ஆற்றின் விளிம்புக்கு வந்தான். அங்கு நேருக்கு நேராக ஓர் ஓநாயைக் கண்டான். மிகுந்த அச்சமடைந்த அவன் நீருக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறினான். அங்கு ஒளிந்து கொண்டான். ஆனால் அங்கு அவன் ஒரு மிகப் பெரிய பாம்பை கண்டான். அது அவனை நோக்கி ஊர்ந்து வந்தது. எனவே அவன் ஆற்றில் குதித்தான். ஆனால் ஆற்றில் ஒரு முதலை அவனை உண்டது..நீதி: கொலைகாரர்களுக்கு ஒளிவதற்கு இடம் கிடையாது. |
ஒரு மனிதன் ஐந்து விளையாட்டு போட்டிகளை கொண்ட தொகுதியை பயின்று வந்தான். ஆனால் அவனுடைய சக குடிமக்கள் அவன் வலிமையானவனாக இல்லை என்று தொடர்ந்து இடித்துரைத்து வந்தனர். அவன் ஒரு நாள் அயல்நாடுகளுக்கு சென்றான். சில காலத்திற்கு பிறகு மீண்டும் திரும்பி வந்தான். பல்வேறு நாடுகளில் பல சிறந்த சாதனைகளை செய்ததாக அவன் பெருமை பேசினான். அவற்றில் எல்லாம் மேலாக ரோட்ஸ் தீவில் இருந்த போது தான் ஒரு தாண்டுதலில் பங்கெடுத்ததாகவும், அதை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற ஒரு தடகள வீரனாலும் கூட சமமாக்க இயலாது என்றும் கூறினான். தனது சாதனையை நேரில் கண்ட மக்களை சாட்சிகளாக தன் நாட்டிற்கு அவர்கள் வந்தால் அழைத்து வருவேன் என்றும் கூறினான். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறியதாவது "நீ கூறுவது உண்மையெனில், நண்பா, உனக்கு சாட்சிகள் தேவையில்லை. ஏனெனில், நீ தற்போது ரோட்ஸ் தீவில் தான் நின்று கொண்டிருக்கிறாய், தாவு" என்றான்..நீதி: இங்கு செயல்களுக்கு மட்டுமே மதிப்பு, வெறும் வார்த்தைகளுக்கு அல்ல..ஓர் ஏழை மனிதன் மிகவும் உடல் நலம் குன்றியிருந்தான். அவன் உடல் நலம் பெறுவான் என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் இழந்து விட்டனர். மனிதன் கடவுள்களிடம் வேண்டினான். தான் உடல்நலம் பெற்றால் கடவுளுக்கு நூறு காளை மாடுகளை பலியிடுவேன் என்று உறுதியளித்தான்..அவன் மனைவி அவனது அருகில் அமர்ந்திருந்தாள். அவள் "இவை அனைத்திற்கும் பணத்தை நீ எங்கிருந்து பெறுவாய்?" என்றாள். அம்மனிதன் கூறினான் "கடவுள் என்னிடம் கேட்கும் நிலைக்கு நான் உடல் நலம் பெறுவேன் என நீ எண்ணுகிறாயா?" என்றான்..நீதி: உண்மையில் தாங்கள் நிறைவேற்ற இயலாத உறுதி மொழிகளை மனிதர்கள் கொடுக்கின்றனர்..ஒரு மனிதனும், ஒரு சட்டைர் கடவுளும் நண்பர்களாயினர். அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது என முடிவு எடுத்தனர். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் குளிர் காலத்தின் ஒரு நாளில் தனது கைகளில் மனிதன் ஊதிக் கொண்டிருப்பதை சட்டைர் கண்டது. "ஏன் இதைச் செய்கிறாய்?" அது கேட்டது. "என்னுடைய கைகளை கதகதப்பாக வைக்க" என்றான் மனிதன். அதே நாள் அவர்கள் இருவரும் இரவு உணவுக்காக ஒன்றாக அமர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு கிண்ணத்தில் சூடான நீராவி பறக்க கூடிய கஞ்சி வழங்கப்பட்டது. மனிதன் அந்த கிண்ணத்தை கையிலெடுத்து தனது வாய்க்கு அருகில் வைத்து ஊதினான். "ஏன் இதைச் செய்கிறாய்?" அது கேட்டது. "என்னுடைய உணவை குளிராக்க" என்றான் மனிதன். சட்டைர் மேசையில் இருந்து எழுந்தது. "நான் வருகிறேன்" என்றது. "நான் செல்கிறேன், ஏனெனில் ஒரே வாயில் சூடான மற்றும் குளிர்ந்த காற்றை ஊதும் ஒரு மனிதனுடன் என்னால் நண்பனாக இருக்க முடியாது" என்றது. |
நீதி: குழப்பமான குண நலனை கொண்டவர்களுடைய நட்பை நாம் முறிக்க வேண்டும்..ஒரு தீயவன் தெல்பி என்ற இடத்தில் இருக்கும் ஆரக்கிள் கடவுளிடம் தான் கேட்கும் ஒரு கேள்வி மூலம் தவறான பதிலை வரவழைத்து கடவுள் நம்பத் தகுந்தது அல்ல என்று நிரூபிப்பேன் என்று பந்தயம் கட்டினான். தன்னுடைய கையில் ஒரு சிறிய பறவையை வைத்துக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட நாளில் கோயிலுக்கு சென்றான். அப்பறவையை தனது மேலங்கி இடுக்கில் மறைத்து வைத்திருந்தான். தன்னுடைய கையில் இருப்பது உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்று கேட்க முடிவெடுத்தான். ஆரக்கிள் கடவுள் "இறந்து விட்டது" என்று கூறினால், அந்த பறவையை உயிருடன் காட்டுவது எனவும், அந்த பறவை "உயிருடன் இருக்கிறது" என்று ஆரக்கிள் கடவுள் பதில் அளித்தால் பறவையை கொன்று அது இறந்து விட்டது என்று காட்டுவது என முடிவெடுத்தான். ஆனால் ஆரக்கிள் அளித்த பதில் யாதெனில் "வழிப்போக்கனே, உன்னுடைய கையில் இருக்கும் பொருளானது உயிருடனோ அல்லது இறந்தோ இருப்பது என்பது முழுவதுமாக உன்னுடைய மன நிலையை சார்ந்துள்ளது" என்று பதிலளித்தது. .நீதி: கடவுள்களை ஏமாற்ற முடியாது..ஒரு காலத்தில் ஒரு கண்பார்வையற்ற மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சிறந்த தொடு உணர்வுத் திறன் இருந்தது. அவனுடைய கைகளில் எந்த ஒரு விலங்கை வைத்தாலும் அது என்ன விலங்கு என்று கூற அவனால் முடிந்தது. ஒரு நாள் அவன் கையில் ஓர் ஓநாயின் குட்டி ஒன்று வைக்கப்பட்டது. அது என்ன விலங்கு என்று அவனிடம் கேட்கப்பட்டது. அதை சிறிது நேரம் உணர்ந்து பார்த்த பிறகு அவன் கூறியதாவது "உண்மையில் இது ஓர் ஓநாயின் குட்டியா அல்லது ஒரு குள்ளநரியின் குட்டியா என்று எனக்கு தெரியவில்லை: ஆனால் எனக்கு தெரிவது யாதெனில் செம்மறியாடுகள் இருக்கும் இடத்தில் இதை நம்பி என்றுமே விட்டு விடாதீர்கள்" என்றான்..நீதி: தீய மனப்பாங்கானது சிறு வயதிலேயே வெளிப்படுகிறது..ஓர் உழவன் தன்னுடைய கலப்பையில் இருந்து காளை மாடுகளை அவிழ்த்தான். அவை தண்ணீர் குடிப்பதற்காக ஓட்டிச் சென்றான். அவன் இல்லாத நேரத்தில் ஒரு பசியுடைய ஓநாய் அங்கு வந்தது. கலப்பையை நோக்கிச் சென்றது. நுகத்தடியில் மாடுகளின் கழுத்தில் கட்டப்படுவதற்காக இருந்த தோல் பட்டைகளை மெல்ல ஆரம்பித்தது. தன் பசிக்கு உணவாவதற்காக அது வேகமாக உண்ண ஆரம்பித்தது. அப்போது அதன் கழுத்தின் மேல் நுகத்தடி மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அது முயன்றது. பிறகு நிலத்தில் கலப்பையை இழுத்துக் கொண்டு நகர்ந்தது. அந்நேரத்தில் உழவன் அங்கு வந்தான். அங்கு நடப்பதைக் கண்ட அவன் "உன்னுடைய திருட்டு தொழிலை விட்டு விட்டு அதற்கு பதிலாக ஒரு நேர்மையான தொழிலை செய்வாய் என நான் எதிர்பார்க்கிறேன்" என்றான். |
நீதி: ஒழுக்கக் கேடானவர்கள் நன்னடத்தையுடன் செயல்படுவேன் என்று உறுதி அளித்தாலும் அவர்களது தீய பழக்க வழக்கங்கள் காரணமாக யாரும் அவர்களை நம்புவதில்லை..ஒன்றாக பறந்து திரிந்த சில பறவைகள் ஒரு மனிதன் ஆளி விதைகளை நடுவதை கண்டன. ஆனால் அதைப் பற்றி அவை எதுவும் எண்ணவில்லை. எனினும் தகைவிலான் குருவி இதன் பொருள் புரிந்தது. அது பறவைகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது ஒரு மோசமான சூழ்நிலை என்பதை விளக்கியது. ஆனால் மற்ற பறவைகள் தகைவிலான் குருவியைக் கண்டு சிரித்தன. ஆளி விதை துளிர் விட்ட போது தகைவிலான் குருவியானது பறவைகளை மீண்டும் எச்சரித்தது. "இது ஏதோ மோசமான ஒன்று. நாம் சென்று அதை பிடுங்கி எறியலாம். நாம் இதை வளர அனுமதித்தால் இதன் மூலம் மக்கள் வலைகளை தயாரிப்பார்கள். அவர்கள் உருவாக்கும் வலைகளிலிருந்து இருந்து நம்மால் தப்ப இயலாது" என்றது. பறவைகள் தகைவிலான் குருவியின் வார்த்தைகளை கிண்டலடித்தன. அதன் அறிவுரையை ஏளனம் செய்தன. எனவே தகைவிலான் குருவியானது மக்கள் இருந்த இடத்திற்கு சென்றது. தன்னுடைய கூட்டை மக்களின் வீடுகளின் கூரைகளுக்கு கீழ் மட்டுமே அமைத்தது. அதே நேரத்தில் தகைவிலான் குருவியின் எச்சரிக்கைக்கு செவி மடுக்க மறுத்த பிற பறவைகள் தற்போது வலைகள் மற்றும் கண்ணிகளில் அடிக்கடி சிக்கின..நீதி: தீயவற்றை விதையிலேயே அழி அல்லது அது வளர்ந்து உன்னுடைய வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்..ஒரு சோதிடர் வானத்தை பார்த்துக் கொண்டவாறே நடந்து சென்றதால் ஒரு குழியில் விழுந்தார். புத்திசாலி மற்றும் நகைச்சுவை திறன் உடைய ஒரு அடிமைப் பெண் தன்னுடைய தலைக்கு மேல் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி தனது காலுக்கு கீழ் என்ன இருக்கிறது என்பதை கவனிக்காமல் விழுந்ததை சுட்டிக் காட்டினாள்..நீதி: நீ உன்னை முதலில் அறியாமல் இந்த உலகத்தை உன்னால் அறிய முடியாது..ஒரு குள்ளநரி ஒரு செம்மறி ஆட்டு மந்தைக்குள் நுழைந்தது. அங்கு பால் குடித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டுக் குட்டியை பிடித்துக் கொண்டது, முத்தமிடுவது போல் நடித்தது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ஒரு நாய் கேட்டது. "நான் ஆட்டுக் குட்டியை அணைத்து விளையாடுகிறேன்" என்றது நரி. அதற்கு நாய் "நீ ஆட்டுக் குட்டியை விட்டு விடுவது நல்லது அல்லது உன்னுடன் நான் நாய்களின் விளையாட்டை விளையாடி விடுவேன்" என்றது. |
ஒரு விவசாயி இறக்கும் தறுவாயில் இருந்தார். தன்னுடைய மகன்களை அழைத்தார். "நான் சீக்கிரமே இறக்க போகிறேன். நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். நம்முடைய திராட்சை தோட்டத்தில் ஒரு புதையல் புதைக்கப்பட்டுள்ளது. அங்கு தோண்டுங்கள், நீங்கள் புதையலை கண்டுபிடிப்பீர்கள்" என்றார். தங்களது தந்தை இறந்த உடனேயே மகன்கள் மண்வெட்டி மற்றும் கடப்பாரையை எடுத்து கொண்டு திராட்சை தோட்டத்திலிருந்த மண்ணை தோண்ட ஆரம்பித்தனர். அங்கு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட புதையலைத் தேடினர். அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் தோண்டப்பட்டதன் காரணமாக திராட்சை கொடிகள் நன்றாக செழித்து வளர்ந்தன. அவர்களுக்கு அதற்கு முன்னர் என்றுமே கிடைத்திராத அறுவடையை கொடுத்தன..நீதி: ஒரு மனிதனின் மிகப்பெரிய புதையல் அவனது உழைப்பு ஆகும்..இரு தவளைகள் ஒன்றாக ஒரு சதுப்பு நிலத்தில் வாசித்தன. ஆனால் ஒரு கடுமையான கோடை காலத்தில் சதுப்பு நிலமானது வறண்டது. அவை தாம் வாழ்வதற்கென மற்றொரு இடத்தை தேடி சென்றன. தங்களுக்கு கிடைத்தால் ஈரமான பகுதிகளை தவளைகள் விரும்பும். இவ்வாறாக பயணித்த போது அவை ஓர் ஆழமான கிணற்றை கண்டன. ஒரு தவளை அக்கிணற்றை உற்றுப் பார்த்தது. மற்றொரு தவளையிடம் அது "இந்த இடம் ஒரு மிதமான குளிர்ந்த இடமாக தோன்றுகிறது. நாம் இதனுள் தாவி இங்கு வசிக்கலாம்" என்றது. ஆனால் புத்திசாலியான மற்றொரு தவளை பதிலளித்ததாவது "அவசரப்படாதே நண்பா, சதுப்பு நிலத்தைப் போல் இந்த கிணறும் வறண்டு போனால் இதிலிருந்து நாம் வெளி வருவது எவ்வாறு?" என்றது..நீதி: எண்ணித் துணிக கருமம்..குட்டையில் இருந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தவளைகள் தங்களை ஆள்வதற்கு ஒரு மன்னனை கொடுக்குமாறு கடவுள் சியுசுவிடம் கத்த ஆரம்பித்தன. இதைக் கண்டு சிரித்த சியுசு தவளைகளுக்கு மன்னனாக ஒரு சிறிய மரத் துண்டை அந்த குட்டைக்குள் திடீரென இட்டார். அந்த மரத் துண்டானது நீரில் மெலிதாக விழுந்த போது அத்தவளைகள் அச்சம் அடைந்தன. மண்ணுக்குள் சென்று பதுங்கின. நீண்ட நேரத்திற்கு அங்கேயே இருந்தன. பிறகு ஒரு தவளை மட்டும் தண்ணீரில் இருந்து மெதுவாக எட்டிப் பார்த்தது. புதிய மன்னனை நன்றாக ஆய்வு செய்த பிறகு அது மற்ற தவளைகளை அழைத்தது. தங்களது அச்சத்தை தவிர்த்து விட்டு அனைத்து தவளைகளும் மரத் துண்டு மீது தாவ ஆரம்பித்தன. அதை வைத்து வேடிக்கை செய்தன. தங்களது மன்னனை அவமதித்து ஏளனம் செய்ததற்கு பிறகு, சியுசுவிடம் தங்களுக்கான மற்றோரு மன்னனை அனுப்புமாறு தவளைகள் கேட்டன. தான் அளித்த மன்னனை தவளைகள் ஏளனம் செய்தததைக் கண்டு சியுசு கோபம் அடைந்தார். எனவே அவர் இரண்டாவது மன்னனாக ஒரு தண்ணீர் பாம்பை அனுப்பினார். அப்பாம்பு ஒவ்வொரு தவளையாக கொல்ல ஆரம்பித்தது. இவ்வாறாக தண்ணீர் பாம்பு மகிழ்ச்சியுடன் கொன்று கொண்டிருந்த நேரத்தில் தவளைகள் பயத்தில் தப்பி ஓட ஆரம்பித்தன. இரகசியமாக அவை சியுசுவுக்கு ஒரு செய்தியை அனுப்பின. இந்த இறப்புகளை தடுக்குமாறு அவரிடம் கேட்டன. சியுசு பதிலளித்ததாவது "மோசமான ஒன்றை பெறுவதற்காக நான் உங்களுக்கு அளித்த நல்ல ஒன்றை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள். எனவே அதனுடன் தான் நீங்கள் வாழ வேண்டும் அல்லது இதை விட மோசமான ஒன்று உங்களுக்கு நிகழலாம்" என்றார்..நீதி: ஒரு தீய ஆட்சியை விட ஆட்சி இல்லாததே சிறந்தது. |
காளை மாடுகள் ஒரு வண்டியை இழுத்துச் சென்றன. அப்போது இரு சக்கரங்களின் இருசுவானது சத்தம் எழுப்பியது. இதனால் கோபமடைந்த வண்டியை ஓட்டியவன் இறங்கி வண்டி மீது சாய்ந்து கொண்டு சத்தமாக "நீ ஏன் சத்தம் எழுப்புகிறாய்? பாரத்தை சுமப்பவர்கள் எந்த ஒரு சத்தத்தையும் எழுப்பவில்லையே!" என்றான். .நீதி: அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவாகவே அழுகிறார்கள்..காற்றுக்கும், சூரியனுக்கும் இடையில் ஒரு விவாதம் ஏற்பட்டது. இரண்டும் தாம் தான் வலிமையானவை என்று கூறின. இறுதியாக ஒரு பயணி மீது தங்களது சக்தியை உபயோகிக்க அவை முடிவு செய்தன. அப்பயணியின் மேலங்கியை யார் சீக்கிரம் உடலிலிருந்து பிரித்து விழா வைக்கிறார்கள் என்று காணலாம் என முடிவு செய்தன. காற்று முதலில் முயற்சித்தது. தாக்குதலுக்கு தனது முழு வலிமையையும் பயன்படுத்தியது. ஒரு பெரும் சூறாவளியாக மனிதனை தாக்கியது. எனினும் அவன் தனது மேலங்கியை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். காற்று எந்த அளவுக்கு வேகமாக வீசியதோ அந்த அளவுக்கு இறுக்கமாக அப்பயணி மேலங்கியை தன் மீது சுற்றிக் கொண்டான். பிறகு சூரியனின் முறை வந்தது. முதலில் பயணி மீது எளிதாக சூரியன் கதிரை வீசியது. உடனேயே தனது மேலங்கியை கழட்டிய அந்த மனிதன் தனது தோள் பட்டையில் அதை போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். பிறகு சூரியன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி கதிரை வீசியது. சில அடிகளை எடுத்து வைத்ததற்கு பிறகு அவன் அந்த மேலங்கியை மகிழ்ச்சியுடன் தூக்கி எறிந்தான். பாரம் குறைந்தவனாக தனது பயணத்தை முடித்தான்..நீதி: ஒருவனை வருத்தி ஒரு செயலை செய்ய வைப்பதை விட அன்பால் ஒரு செயலை செய்ய வைப்பது சிறந்தது..ஒரு மக்கள் கூட்டமானது பெண் தெய்வம் திமேத்தருக்கு ஒரு காளையை பலியிட்டனர். அகண்ட பரப்பில் இலைகளை தூவினர். மேசைகளில் தட்டுகளில் மாமிசம் வைக்கப்பட்டது. பேராசை கொண்ட ஒரு சிறுவன் மாட்டு குடல் நாளங்களை வயிறு முட்ட முழுவதுமாக உண்டான். வீட்டுக்கு செல்லும் வழியில் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தனது தாயின் மடியில் விழுந்தவன் வாந்தி எடுத்தான். "நான் இறக்க போகிறேன் தாயே, எனது அனைத்து குடல் நாளங்களும் வெளியே விழுகின்றன" என்றான். தாய் அளித்த பதிலானது "தைரியமாக அனைத்தையும் வாந்தி எடுத்து விடு. எதையும் வைத்துக் கொள்ளாதே. நீ வாந்தி எடுப்பது உனது குடல் நாளங்கள் அல்ல. அவை காளையின் குடல் நாளங்கள்" என்றான்..நீதி: ஓர் ஆதரவற்றவரின் சொத்தை ஊதாரித் தனமாக செலவு செய்த ஒருவன், அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலை வரும் போது அழுகிறான். |
ஒரு சன்னலுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கூண்டில் ஒரு இராப்பாடி அடைக்கப்பட்டிருந்தது. அங்கு பறந்து சென்ற ஒரு வௌவால் இராப்பாடியிடம் அது ஏன் இரவில் மட்டும் பாடுகிறது, ஆனால் பகலில் அமைதியாக இருக்கிறது என்று கேட்டது. பகல் பொழுதில் ஒரு முறை பாடும் போது தான் பிடிக்கப்பட்டதாகவும், அது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், அதற்கு பிறகு இரவில் மட்டுமே தான் பாடுவேன் என்று சபதம் எடுத்ததாகவும் அது கூறியது. வௌவால் கூறியதாவது "ஆனால் அதற்கு இப்போது தேவை இல்லை. இவ்வாறு பாடுவது உனக்கு எந்த வித நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. நீ பிடிக்கப்படும் முன்னரே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்"..நீதி: அழிவு ஏற்பட்டதற்கு பிறகு வருந்தி பயன் இல்லை..ஓர் மேய்ப்பாளனின் கன்று குட்டிகளில் ஒன்று தொலைந்து விட்டது. அவன் கடவுளின் உதவியை வேண்டினான். தன்னுடைய கன்றுக் குட்டியை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டால் கடவுளுக்கு ஒரு கன்றுக் குட்டியை தான் காணிக்கையாக செலுத்துவேன் என்று உறுதியளித்தான். அவன் அலைந்து திரிந்த போது தொலைந்து போன கன்றுக் குட்டியின் இறந்த உடலை துண்டு துண்டாக ஒரு சிங்கம் மென்று கொண்டிருப்பதை கண்டான். பிறகு அவன் கடவுளிடம் வேண்டியதாவது "கடவுளே, இந்த காட்டு விலங்கின் அச்சுறுத்தலில் இருந்து நான் தப்பித்தால் என்னுடைய உயிருக்கு காணிக்கையாக மற்றொரு கன்று குட்டியை நான் உனக்கு அளிப்பேன்" என்று வேண்டினான்..நீதி: ஒவ்வொரு மனிதனும் எந்த அதிகப்படியான செல்வம் அல்லது வருவாயை விட தன்னுடைய சொந்த உயிரை மிகவும் விரும்புகிறான்..ஒரு மரநாய் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது. அபுரோதைத் எனும் பெண் கடவுள் அந்த மரநாயை ஒரு பெண்ணாக மாற்றியது. இதன் மூலம் இந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள் என்று மாற்றியது. அந்த இளைஞனும் அப்பெண்ணைக் கண்டவுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். திருமண விருந்து நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு எலி ஓடியது. தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட ஆசனத்திலிருந்து மணப் பெண் கீழே குதித்தாள். அந்த எலியைத் துரத்த ஆரம்பித்தாள். இவ்வாறாக திருமணம் நின்று போனது..நீதி: விருப்பத்தை விட இயற்கை வலிமையானது. |
ஒரு விவசாயியின் வீட்டின் முன் கதவை சுற்றி ஒரு பாம்பு திரிந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அப்பாம்பு விவசாயியின் மகனை அவனது காலில் கடித்தது. அச்சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். அச்சிறுவனின் பெற்றோர் மிகுந்த துயரமடைந்தனர். அந்த விவசாயி தன்னுடைய கோடாரியை எடுத்து அப்பாம்பை கொல்ல முயன்றான். பாம்பு தப்பித்து சென்ற போது அதை விவசாயி துரத்தினான். தன்னுடைய ஆயுதத்தின் மூலம் அதை கொல்ல முயன்ற போது அவரால் அப்பாம்பின் வாலை மட்டுமே துண்டாக்க முடிந்தது. தான் அந்த பாம்பை கொன்று இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. எனவே தேன் மற்றும் உப்புடன், ரொட்டித் துண்டு மற்றும் நீரை எடுத்துக் கொண்டு பாம்பை அவன் அழைத்தான். அதனுடன் அமைதி வேண்டினான். ஆனால் பாறைகளில் ஒளிந்து கொண்டிருந்த அந்த பாம்பு சத்தம் எழுப்பியவாறு விவசாயிடம் கூறியதாவது "மனிதனே, வீணாக சிரமப்படாதே. நமக்கு இடையில் நட்புறவு என்பதற்கு இனி வாய்ப்பில்லை. என்னுடைய வாலை நான் பார்க்கும் போது எனக்கு வலி ஏற்படும். அதே போல உன்னுடைய மகனின் சமாதியை எப்போதெல்லாம் நீ காண்கிறாயோ அப்போதெல்லாம் உனக்கு துயரம் ஏற்படும். என்னுடன் அமைதியான நிலையில் உன்னாள் வாழ முடியாது" என்றது..நீதி: நடந்த துயரம் ஒருவருக்கு மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை ஒரு நாளும் வெறுப்பு அல்லது பழி வாங்குவதற்கான எண்ணங்களை தவிர்க்க இயலாது..ஒரு விவசாயி தன் கிராமத்து பண்ணையில் ஒரு பனிப் புயலின் போது மாட்டிக் கொண்டான். அவனுக்கு உண்ண எந்த உணவும் கிடைக்கவில்லை. எனவே அவன் முதலில் தன்னுடைய செம்மறியாடுகளையும், பிறகு தன்னுடைய ஆடுகளையும் உண்டான். புயல் மோசமான போது தன்னுடைய கலப்பையை இழுத்துச் செல்லும் காளைகளையும் கூட கொன்றான். நடந்து கொண்டிருப்பதைக் கண்ட நாய்கள் ஒன்று மற்றொன்றிடம் கூறியதாவது "இங்கிருந்து நாம் இப்பொழுதே சென்று விட வேண்டும். தனக்காக கடுமையான உழைத்த காளைகளையே அவர் விட்டு வைக்காத போது, நாம்மை மட்டும் எப்படி விட்டு வைப்பார்?" என்றது..நீதி: தன் சொந்த மக்களையே நன்முறையில் நடத்தாதவனை விட்டு விலகு. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.