classic
stringlengths
19
1.22k
Description
stringlengths
5
2.28k
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nதுன்பத்துள் துப்பாயார் நட்பு
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nவிழுமந் துடைத்தவர் நட்பு
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஅன்றே மறப்பது நன்று
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஒன்றுநன்று உள்ளக் கெடும்
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nசெய்ந்நன்றி கொன்ற மகற்கு
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து\nஇன்சொல னாகப் பெறின்
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்\nஇன்சொ லினதே அறம்
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்\nஇன்புறூஉம் இன்சொ லவர்க்கு
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅணியல்ல மற்றுப் பிற
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பின் தலைப்பிரியாச் சொல்
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇம்மையும் இன்பந் தரும்
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ\nவன்சொல் வழங்கு வது
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
இனிய உளவாக இன்னாத கூறல்\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவேளாண்மை செய்தற் பொருட்டு
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா\nமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nபருவந்து பாழ்படுதல் இன்று
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்விருந்து ஓம்புவான் இல்
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nமிச்சில் மிசைவான் புலம்
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nதுணைத்துணை வேள்விப் பயன்
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nவேள்வி தலைப்படா தார்
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nமடமை மடவார்கண் உண்டு
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுன்கண்நீர் பூசல் தரும்
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்போடு இயைந்த தொடர்பு
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பென்னும் நாடாச் சிறப்பு
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஇன்புற்றார் எய்துஞ் சிறப்பு
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nமறத்திற்கும் அஃதே துணை
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
என்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பி லதனை அறம்
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
அன்பகத் தில்லா உயிரவாழ்க்கை வன்பாற்கண்\nவற்றல் மரந்தளிர்த் தற்று
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை\nஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஎன்புதோல் போர்த்த உடம்பு
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nமக்கட்பேறு அல்ல பிற
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்\nபண்புடை மக்கட் பெறின்
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்\nதம்தம் வினையான் வரும்
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்\nசிறுகை அளாவிய கூழ்
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்\nசொற்கேட்டல் இன்பம் செவிக்கு
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nமழலைச்சொல் கேளா தவர்
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து\nமுந்தி யிருப்பச் செயல்
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\nசான்றோன் எனக்கேட்ட தாய்
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை\nஎன்நோற்றான் கொல்எனும் சொல்
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஎனைமாட்சித் தாயினும் இல்
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nஇல்லவள் மாணாக் கடை
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதிண்மை உண்டாகப் பெறின்
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண்
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்\nநிறைகாக்கும் காப்பே தலை
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nஏறுபோல் பீடு நடை
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nநன்கலம் நன்மக்கட் பேறு
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nபோஒய்ப் பெறுவது எவன்
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nமுயல்வாருள் எல்லாம் தலை
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன் - வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்பது இல்லாயின் நன்று
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nதெய்வத்துள் வைக்கப்படும்
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஆக்கம் எவனோ உயிர்க்கு
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nமறத்தலின் ஊங்கில்லை கேடு
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும் வாயெல்லாம் செயல்
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்தறன்\nஆகுல நீர பிற
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇழுக்கா இயன்றது அறம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nபொன்றுங்கால் பொன்றாத் துணை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nவாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nபுறத்த புகழும் இல
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nஉயற்பால தோரும் பழி
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்றது.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nபெருமை பிறங்கிற்று உலகு
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nவரனென்னும் வைப்பிற்கோர் வித்து
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஇந்திரனே சாலும் கரி
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறயர்\nசெயற்கரிய செய்கலா தார்
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்\nவகைதெரிவான் கட்டே உலகு
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nமறைமொழி காட்டி விடும்
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nகணமேயுங் காத்தல் அரிது
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுக லான்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
வானின்று உலகம் வழங்கி வருதலால்\nதானமிழ்தம் என்றுணரற் பாற்று
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nதுப்பாய தூஉம் மழை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஉள்நின்று உடற்றும் பசி
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்\nவாரி வளங்குன்றிக் கால்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nபசும்புல் தலைகாண்பு அரிது
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nதான்நல்கா தாகி விடின்
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nவறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nவானம் வழங்கா தெனின்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின்
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nநிலமிசை நீடுவாழ் வார்
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nயாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.